Saturday, December 26, 2009

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத்

இமையத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரிநாத் கோவில் உள்ளது . இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மகாவிஷ்ணு ) மூர்த்தி ஸ்வரூபமாக காட்சி தருகிறார் . புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது . பல வருடங்களாகக் குளத்தடியில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதிசங்கரர் கண்டெடுத்து பத்ரிநாத் கோவிலை அமைத்து மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது . இரண்டு அடி உயரத்தைக் கொண்ட கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர் பத்மாசன கோலத்தில் தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் உத்தப்பாநார, நாராயண முனிவர்களின் மூர்த்திகள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றன . நாரத முனிவர் மண்டி இட்டு அமர்ந்துள்ள நிலையில் காட்சி தருகிறார். இடப்புறத்தில் குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் பார்க்கலாம் . மகாவிஷ்ணுவின் வாகனமான கருட பகவானின் சிலையும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும் .


பத்ரிநாராயனரின் சந்நிதி தங்கம் மற்றும் வெள்ளித் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாக தோற்றமளிக்கிறது. இவ்வாலயத்திலுள்ள கல்சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன . பிரதான சந்நிதிக்கு சற்றுத் தொலைவில் மகாலஷ்மியின் சந்நிதியும் இடம்பெற்று உள்ளது . அடுத்து ஆதிசங்கரரின் சன்னிதியையும் காணலாம் . பத்ரிநாத் கோவில் மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தறந்து வைக்கப்பட்டிருக்கும் .
அடுத்த ஆறுமாதம் காலத்தில் இந்தக் கோவிலின் பூசாரிகள் ஜோஷிமத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் பூஜைகளை தொடர்ந்து செய்கிறார்கள் . ஆறுமாத காலம் கழித்து மீண்டும் பத்ரிநாத் கோவில் திறக்கப்படும்போது , கோவில் மூடப்படுவதற்கு முன் பிரதான சந்நிதியில் ஏற்றப்பட்ட நெய்விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும் . ஆறுமாத காலமாக மூடிக்கிடக்கும் கோவிலுக்குள் நாரத முனிவர் பத்ரிநாராயனரைப் பூஜித்து தியானத்திலிருப்பதாக புராணங்கள் சொல்லுகின்றன .



ஆலகநந்தா நதிக்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குலத்தைக் காணலாம் . இந்தக் குளத்தின் அருகே 5 பாறைகளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடத்தையும் காணலாம் . இந்த 5 பாறைகளை நாரதர், நரசிம்மர், வராகர் , கருடர், மார்கண்டேயர் என்று சொல்கிறார்கள் . பத்ரிநாத் கோவிலுக்கு எதிர் எதிரே அமைந்துள்ள மலைச் சிகரங்களில் நார, நாராயண முனிவர்கள் தவமிருந்தார்கள் . அதனால் இந்த இரண்டு மலைகளையும் நார மலை என்றும் , நாராயண மலை என்றும் அழைக்கின்றனர். கூர்ம, பிரகலாத , ஊர்வசி , ப்ருகு , இந்திரன் ஆகிய 5 அழகிய நீர்வீழ்ச்சிகளும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன . சற்று தொலைவில் மணிநாக பர்வதத்தைப் பார்க்கலாம் . யக்ஷனால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் முதல் புத்திரனான தருமர் பதில் அளித்து, சகோதரர்களின் உயிர்களை மீட்டு வந்த பழம்பெருமையைப் பெற்றது இந்த மணிநாக மலை .


பத்ரிநாத்திலிருந்து வடமேற்கு திசை நோக்கி நான்கு கிலோமீட்டர் தொலைவில் வேதவியாசர் குகையை பார்க்கலாம் . இந்தக் குகை , வியாச முனிவர் நான்கு வேதங்களைப் படைத்த பெருமையைக் கொண்டது . இதனை அடுத்து கணேச குகையையும் பார்க்கலாம் . ஸ்கந்த முனிவருக்கு சிவபெருமான் இமயத்தின் சிறப்பை சொன்னதும், ஸ்கந்த முனிவர் ஸ்கந்த புராணத்தைப் படைத்ததுமாகிய வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது இந்தக் குகை . பத்ரிநாத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பனிக்கட்டிகளால் உருவாகிய சடோபந்த் ஏரியைப் பார்க்கலாம் . இந்த ஏரியின் அருகே பிரம்மா , விஷ்ணு , மகேஷ்வர் மூவரும் தவமிருந்தனர் என்று புராணங்கள் சொல்லுகின்றன . பத்ரிநாத் கோவிலை அடுத்து ஆதிபத்ரி , விருத்தபத்ரி , பவிஷ்யபத்ரி , யோகத்யான்பத்ரி என்னும் நான்கு பத்ரி கோவில்களும் இடம் பெற்று உள்ளன .


பத்ரிநாத்தில் ஆதி சங்கரர் மடமும் இடம் பெற்று உள்ளது . மடத்தின் இடப்புறத்தில் சிறிய குகை ஒன்றைப் பார்க்கலாம் . இந்தக் குகையில் சங்கராசாரியார் தியானம் செய்ததாகப் புராணங்கள் சொல்லுகின்றன . மடத்தின் வலப்புறத்தில் கற்பகவிருட்சத்தை பார்க்கலாம் . இந்த விருட்சத்திற்குக் கீழேதான் சங்கராச்சாரியார் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது . சங்கர மடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அனுமன்சட்டி என்ற இடம் அமைந்துள்ளது . இந்த இடம் வாயு புத்திரர்களாகிய அனுமனும் , பீமனும் தங்களது பலத்தைப் பரிசோதனை செய்த வரலாற்றைப் பெற்றது . இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமான பூக்கள் நிறைந்த பூங்காவனத்தையும் பார்க்கலாம் . இந்த வனத்திலிருந்து சிறிது தூரத்தில் ஹேமாகுந்த ஏரியைப் பார்க்கலாம் . இந்த ஏரியின் அருகே சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த்சிங்க் தியானம் செய்தார் என்கிறார்கள் . இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பை உடைய பத்ரிநாத் கோவிலின் அழகை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமில்லையா ?

No comments:

Post a Comment