Thursday, June 25, 2009

அயோத்தியில் அழகிய கோயில்கள்


உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள சரயு நதிக் கரையோரத்தில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது . அயோத்தியா " ஸ்ரீராமர் பிறந்த பூமி " என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது . அயோத்தியாவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ ராமர் கோயிலருகே மசூதி ஒன்றும் இருந்தது . 15 -ஆவது நூற்றாண்டில் முகலாயர்கள் ஆண்ட காலத்தில் இந்தப் பாப்ரி மசூதி கட்டப்பட்டது என்பது வரலாறு. பெரும் சர்ச்சைக்கு பிறகு 1992 -ஆம் ஆண்டில் இந்த மசூதி இடிக்கப்பட்டது.

அயோத்தியா நுழைந்தவுடன் " குப்தர் காட்" என்ற இடம் உள்ளது . சக்ர ஹர்ஜீ விஷ்ணு எனும் புகழ்பெற்ற கோயில் இந்த இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை வர்ணிக்கும் வகையில் சிற்பங்களும், மூர்த்திகளும் அழகாக காட்சி தருகின்றன. இவற்றுள் ஸ்ரீராமமூர்த்தி மிகவும் விஷேசமாக மக்களால் துதிக்கப்படுகிறார். மேலும் ஸ்ரீராமர் பாதங்கள் தொட்ட மண் என்ற சிறப்பால் அவருடைய பாதங்கள் கொண்ட சின்ன சந்நிதியும் இடம் பெற்றுள்ளது .

அடுத்து " ஸ்ரீராமர் ஜென்மஸ்தானம் " என்ற இடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த இடம் ஸ்ரீராமனின் வாழ்க்கை வரலாற்றை வர்ணிக்கும் வகையில் நூறு மூர்த்திகள் கொண்ட சின்ன சின்ன நூறு சந்நிதிகள் கொண்டுள்ளன. இந்த இடத்தை ஒட்டினாற்போல " கனகபவன் " என்ற கோயிலும் இடம்பெற்றுள்ளது . அந்தக் காலத்தில் ஆண்ட அர்ச்சா என்ற அரசனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் "சீதாமஹால் " என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

கனகபவன் கோயிலைத் தாண்டி அறுபது படிக்கட்டுகள் கொண்ட சிறிய குன்றின் மேல் அனுமார் கோயில் ஒன்றுள்ளது. ஆறு அடி நீளத்தில் அமர்ந்த வண்ணம் அனுமார் சிலை வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் காட்சி தருகிறது.

இதனை அடுத்து " லக்ஷ்மன் காட் " என்ற பெயரில் அழைக்கப்படும் குளமும் உள்ளது . இந்த இடத்தில் ஸ்ரீராமர் யாகம் செய்ததாகவும் , லக்ஷ்மணர் இங்கு நீராடியதாகவும் புராணங்கள் சொல்கின்றன. லக்ஷ்மன்காட் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தந்தி கிராமம் இடம் பெற்றுள்ளது . ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது சிறிய குடிசையில் தனியாக வாழ்ந்த பரதன் இந்த இடத்திலிருந்து அயோத்தியாவை ஆண்டு வந்தான் என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த இடம் "பரத குண்டம் " என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பரத குண்டத்திற்கு அருகே சொர்க்கத் -துவாரம் என்ற குளம் ஒன்றை நாம் பார்க்கலாம் . இந்தக் குளம் "ஸ்ரீராமர் நீராடிய குளம் " என்ற சிறப்பை பெறுகிறது . இந்த இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் "தசரத தீர்த்தம் " என்ற இடத்தையும் காணலாம். தசரதர் மரணமடைந்த பிறகு இந்த இடத்தில் ஸ்ரீ ராமர் கடைசிக் காரியங்கள் செய்ததாக வரலாறு சொல்கிறது .

பிரம்ம தேவனும் அயோத்தியாவில் காட்சி கொடுத்ததால் அதற்கு அடையாளச் சின்னமாக "பிரம்ம குண்டம் " என்ற குளம் ஒன்று உள்ளது . இதற்கு அடுத்தாற்போல "சீதா குண்டம் " என்ற பெயரில் குளம் ஒன்று அமைந்துள்ளது . இந்தக் குண்டத்தில் நீராடினால் சகல பாவங்களும் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையோடு மக்கள் நீராடிச் செல்கிறார்கள் .

ஒரு சமயத்தில் ஸ்ரீ ராமரின் மூத்த புதல்வன் "குஷ் " சரயு நதியில் நீராடிக் கொண்டிருந்த பொழுதில் அவருடைய கங்கணம் தொலைந்துவிட்டது. அவருடைய கங்கணத்தை கைப்பற்றிய நாக கன்னிகை குஷ்விடம் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அவர் மீது காதல் கொண்டால் . நாக கன்னிகை சிவ பக்தியுடையவள். அவள் காட்டிய அன்பிற்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு குஷ் "நாகேஷ்வரனாத் கோயில் " கட்டினார். விக்கிரமாதித்யன் ஆண்ட காலத்தில் இந்தக் கோயிலில் சிவராத்திரி பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது என்று வரலாறு குறிக்கிறது. அவ்வளவு பழமை பெற்ற இந்தக் கோயில் இன்னும் பொலிவோடு சிறப்பாக காட்சி தருகிறது.

துளசிதாசர் என்ற மகாகவி பழம் பெரும் ராமாயணக் காவியத்தை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். அவர் வாழ்ந்த இடம் "துளசி செளரா" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. துளசி தாசர் ஸ்ரீ ராமர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவருடைய நாமங்களை பாடிக்கொண்டிருந்த துளசி தாசர் தீடிரென்று சமாதி அடைந்தார். துளசி தாசரின் நினைவாக அந்த இடத்தில் "துளசி ச்மாரக் பவன் " என்ற பெயரில் சிறிய கோவிலொன்று கட்டப்பட்டது .

அயோத்தியா மாநகரில் இடம் பெற்றுள்ள அனைத்து கோயில்களும் நம்மை வியக்க வைக்கின்றன . ஸ்ரீ ராமர் பிறந்த பூமி என்று அழைக்கப்படும் இந்த அழகிய அயோத்தியா மாநகரத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Tuesday, June 23, 2009

இந்தியர்கள் கொண்டாடும் முத்துமாரியம்மன் கோவில் - லண்டன்

101 பவுண்ட் நிதியோடு தொடங்கப்பட்ட சிவயோகம் அறக்கட்டளை சார்பாக லண்டன் மாநகரில் முத்துமாரி அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டது . முத்துமாரி கடல் தாண்டிக் காக்க வந்த கதை தெரியுமா ?

இந்தக் கோவிலை அமைப்பதற்கு முக்கிய காரியகர்த்தா நாகேந்திர சீவரத்தினம் என்பவர் ஆவார் . 1977 ஆம் ஆண்டில் இலங்கை , யாழ்ப்பாணத்திலுள்ள குளப்பிட்டியார் பொன்னுதுரை என்ற பெரியவர் சீவரத்தினத்திடம் , 'குல தெய்வத்திற்காக கர்ப்ப கிரகம் அமைக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது' என்று சொன்னார் . அந்தப் பெரியவருடைய வாக்கு பலித்தது . 1987 ஆம் ஆண்டில் நாகேந்திர சீவரத்தினம் லண்டன் வந்தபோது அங்கு எந்தவித திருக்கோவிலும் இல்லாததைக் கண்டார் . அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு திருக்கோவில் அமைக்க வேண்டுமென்று எண்ணினார் . ஆலயம் அமைத்து அதனை நிர்வகிக்க இங்கிலாந்து நாட்டின் சட்ட அமைப்பின் படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார் . அந்த அறக்கட்டளைக்கு 'சிவயோகம்' என்ற பெயரைச் சூட்டினார் . இந்த அறக்கட்டளைக்கு மூன்று அறங்காவலர்களையும் நியமித்தார் .

கோவிலுக்கு விக்ரகங்கள் செய்யும் பணியை ச்தபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது . முதலில் பிரதான மூர்த்தியான முத்துமாரியம்மன் மூர்த்தியை வடித்து சீவரத்தினத்திடம் கொடுத்தார் . அதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் . அவருக்கு 'அப்போது அம்பாள் வந்து சேர்ந்தால் , இனி எல்லாம் நல்லபடியாக அமையும் ' என்று இச்சினி சொல்வது போல ஒரு குரல் ஒலித்ததாம் .

05.04.1996-இல் சிவயோக அறக்கட்டளையின் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து , அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் லண்டன் மாநகரிலே திறக்கப்பட்டது . சக்தி விநாயகர், சுப்ரமண்யர் , சீதை -லக்ஷமணன் -அனுமன் சகித ஸ்ரீராமர் , குருவாயூரப்பன் , லக்ஷ்மி , சரஸ்வதி , விஜயதுர்கை ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டன . இவ்வாலயத்திற்கு அரசுப் பிரமாணமும் கிடைத்து , இன்றுவரை கோவிலை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் . ஆரம்பகாலத்தில் கோவிலுக்கு நிதி உதவியும் சரீர உதவியும் செய்ய முன்வந்தவர்கள் ஒருசிலரே . நாளடைவில் கோவில் வளர்ந்து வருடத்திற்கு இரண்டரை லட்சம் பவுண்டுகள் வருமானத்தை பெறுகிறது .

05-04-1996- இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ்வாலயம் 2001-ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து மகோத்சவ பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது . ஆண்டு முழுவதும் இந்த முத்து மாரியம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும் .

பிரதான மூர்த்தியாக அருள் தரும் அன்னை முத்துமாரியாம்ம்னக்கு சித்ரா பௌர்ணமியில் கொடியேற்றப்பட்டு 21 நாட்கள் மகோத்சவ பெருவிழா நடத்தப்படுகின்றது . இந்த மகோத்சவ பெருவிழாவில் தேர்த் திருவிழா , கரகத் திருவிழா , வேட்டைத் திருவிழா , சப்பரத் திருவிழா , ஊஞ்சல் திருவிழா, பூபல்லக் திருவிழா என்று பல திருவிழாக்கள் பக்தர்களால் நடத்தப்படுகிறது . வைகாசி விசாகத்தன்று 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது . ஆடிப்பூரத்தன்று 108 வலம்புரிச் சங்கு அபிஷேகத்தோடு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது . நவராத்திரியில் அம்மன் கொலு மண்டப்பத்தில் காட்சி தருகிறாள் . பொங்கலன்று மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது . இப்படி ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழாக் கோலம்தான் .

சக்தி விநாயகர் பெருமானுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை சதுர்த்தியில் சிறப்பு அபிஷேகமும் , ஆவணி சதுர்த்தியில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்று வருகிறது . முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாவும் , கந்த்சஷ்டியின்போது ஆறு நாட்கள் திருவிழாவும் கோலாகலமாக நடைபெறும் .

சீதை , லக்ஷ்மணர், அனுமன் சகிதமாக வீற்றிருக்கும் ராமபிரானுக்கு ஏகாதசி மற்றும் ராம நவமியை அங்குள்ள தமிழர்கள் கோவிலில் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் . குருவாயூரப்பனுக்கு தேய்பிறை ஏகாதசியில் அபிஷேகமும் , கிருஷ்ணஜெயந்தியன்று உரியடியும் சிறப்பாக நடைபெறுகிறது .

ஆடி மாதத்தில் வரலக்ஷ்மி பூஜை , சுமங்கலிப் பூஜை , தை மாதம் கடைசி வெள்ளிகிழமையில் திருவிளக்கு பூஜையும் பிரமாதமாக நடைபெறுகிறது . இப்படி ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலத்தோடு அனைவருக்கும் அருள் புரிந்து கொண்டிருக்கும் முத்துமாரி அம்மனின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது . தங்கள் துன்பங்கள் நீங்க நாடிவரும் பக்தர்களுக்கு முத்துமாரி அம்மன் அருள் பொழிகிறாள் . குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர்கள் அம்பாள் சந்நிதியில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர் . அவர்களின் வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம் . லண்டன் மாநகரிலே வீற்றிருக்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் அனைவரையும் காப்பாற்றுகிறாள் .

Saturday, June 20, 2009

நல்நம்பிக்கை வளர்க்கும் சுவாமி நாராயணர் அக்க்ஷர்தாம் கோயில் புதுடில்லி

புதுடில்லியில் யமுனை நதிக்கரையோரத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயம் உருவாக்கப் பட்டுள்ளது . பிரமுக் சுவாமி மகாராஜ் என்பவர் (சுவாமி ரிஷி என்றும் அழைக்கப்படுகிறார் ) தனது குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த ஆலயத்தை வடிவமைத்தார். இந்தக் கோவிலை கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின . 8.11.2000 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு யோகிஜி மகாராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 6.11.2005 ஆம் ஆண்டில் சுவாமி ரிஷி தலைமையில் இந்தக் கோவில் திறப்பு விழா கண்டது.
மூன்று லட்சம் கற்களில் சிற்பங்களை வடிவமைத்து மிகவும் பிரம்மாண்டமாக இந்தக் கோவிலை உருவாக்கியுள்ளனர். ஆலயத்தின் வெளிப்புறத்தில் கண்ணை கவரும் வண்ணம் ரோஜா நிறம் கொண்ட மணல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் வெள்ளைப் பளிங்குக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் 141 அடி உயரமும், 356 அடி அகலமும், 313 அடி நீளமும் அமைத்துள்ளது . பல வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்ட 234 தூண்களைக் கொண்ட இந்த ஆலயத்தில் ஒன்பது பிரம்மாண்டமான கலையம்சம் நிறைந்த கோபுரங்களும் இடம் பெற்றுள்ளன . இந்தக் கோவிலில் பத்து நுழைவாயில்கள் உள்ளன . இந்தப் பத்து வாயில்களும் பத்து வகையான எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.

அதைக் கடந்து சென்றால் "மயூர் துவாரம்" என்னும் மயில் வாயில் உள்ளது . இங்கு கற்களால் செதுக்கப்பட்ட 869 மயில்கள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் தொகையை விரித்து நர்த்தனம் செய்யும் காட்சி பிரமிக்கத்தக்கது . ஆலயத்தின் நடுப்பகுதியில் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்ட 11 அடி உயரம் கொண்ட பகவான் சுவாமி நாராயண மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது . அவருடைய குரு பரம்பரையான அக்க்ஷர்பிரம்மா குணாதி நந்த சுவாமிஜி , பக்ஷிஜி மகாராஜ் , சாந்திரிஜி மகாராஜ் , யோகிஜி மகாராஜ் , பிரமுக் சுவாமி மகாராஜ் ஆகியோரும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளனர் .

பகவான் சுவாமி நாராயணன் 02.04.1781 ஆம் ஆண்டில் அயோத்யா மாநகரிலுள்ள சப்பைய்யா என்ற கிராமத்தில் பிறந்தார் . பாலபருவத்தில் இவர் கன்ஷ்யாம் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . எட்டு வயதிலே கன்ஷ்யாமிற்கு உபநயனம் செய்வித்து வேத்சாலைக்கு அனுப்பப்பட்டார் . அங்கு சாஸ்திரங்கள் , புராணங்கள் , வேதங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார் . அவருடைய பத்தாவது வயதிலே சாஸ்திரங்களைப் பற்றி ஆன்மீகச் சிந்தனையோடு மக்களுடன் உரையாடினார் . பதினொன்றாவது வயதில் 1200 கிலோமீட்டர்களை கடந்து இமய மலையிலுள்ள மானசரோவர் வந்து சேர்ந்தார் . அங்கு கடும் தவம் புரிந்தார். அங்கிருந்து பல இடங்களுக்குப் பயணத்தை தொடங்கினார் . கடைசியில் குஜராத் மாநிலத்தில் லொஜ் என்ற இடத்தில் உள்ள ராமானந்த் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் . ராமானந்த் சுவாமி அவருக்கு தீக்ஷை கொடுத்து சஜானந்த் சுவாமி என்ற பெயரையும் சூட்டினார் . ராமானந்த் சுவாமி மறைந்த பிறகு சஜானந்த் சுவாமி 21 வயதிலே ஆஸ்ரமத்திற்கு தலைமை வகித்தார் . அவர் சுவாமி நாராயணன் மகா மந்திரத்தை போதித்தார் . அதிலிருந்து அவர் பகவான் சுவாமி நாராயணன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . தீண்டாமை , ஜாதிபிரச்ச்சனை , பெண் சிசுவதம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற தீய பழக்கங்களை எதிர்த்தார் . பகவான் சுவாமி நாராயணன் 49 ஆவது வயதில் இறைவனுடன் கலந்தார்.

சுவாமி நாராயணன் சந்நிதியில் கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் தியானம் செய்தால் நம்மிடமிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன. தூய்மையும் அமைதியும் நிலவும் இந்த சந்நிதியை சுற்றி ஆங்காங்கே சுவாமி நாராயணின் பருவ காலத்தை கட்டும் வகையில் பெரிய அளவில் புகைப்படங்கள் மாட்டப்பட்டு , அதனருகே அவரைப் பற்றிய விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .

மேலும் இவ்வாலயத்தில் சீதாதேவி , லக்ஷ்மணர் , அனுமார் சமேதராக ஸ்ரீராமர் , ராதாகிருஷ்ணன் , சிவன்-பார்வதி , ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் . இந்த சந்நிதியில் பிரமாண்டமான கலையம்சம் மிக்க மேற்கூரைகள் பிரமிக்க வைக்கின்றன .இந்தக் கோவிலை தாங்கிக் கொண்டிருக்கும் 234 தூண்களிலும் விதவிதமான நர்த்தனம் செய்யும் சிற்பங்களைப் பார்க்கலாம் .

கற்களால் செதுக்கப்பட்ட 1070 யானை வடிவங்களை கொண்ட கஜேந்திர பீடமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றுள்ளது . 151 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரால் நிரப்பப்பட்ட நாராயண் சரோவர் என்னும் நீர்நிலை கோவிலை சுற்றி இடம் பெற்றுள்ளது . இதில் குளிப்பவர்கள் சகல வியாதிகளும் குழப்பங்களும் நீங்கி , முகத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பெற்றுச் செல்கிறார்கள் .

இதைத் தவிர, கோவிலுக்குள் சுரங்கப் பாதை அமைத்து கண்காட்சி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது . இரவு வேளையில் வண்ண மின் விளக்குகளின் ஜொலிப்பில் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றை பார்த்து ரசிக்கலாம் . மின் விளக்குகளின் பிரகாசத்தில் ஜொலிக்கும் இவ்வாலயத்தை இரவு நேரத்தில் பார்க்கும்போது தெய்வ லோகத்தில் இருப்பது போன்ற உணர்வை அனுபவிக்கலாம் .

புதுடில்லி செல்பவர்கள் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயத்தை அவசியம் தரிசியுங்கள் .